காரமடை அருகே நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
காரமடை:
கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 18). இவர் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். கொரோனா காரணமாக கல்லூரிகள் இல்லாததால் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதிக்கு நண்பர்கள் 7 பேருடன் வந்துள்ளார். பின்னர் அதே பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குட்டையில் குளிக்க சென்றுள்ளனர்.இதில் 7 பேருக்குமே நீச்சல் தெரியவில்லை.அப்போது மணிகண்டன் ஆழமான பகுதிக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்க தொடங்கினார். இதனால் அவர் காப்பாற்றும்படி கூச்சலிட்டார். நண்பர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாததால் அவர்கள் விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரை அழைத்துவந்தனர்.
ஆனால் அதற்குள் மணிகண்டன் நீரில் மூழ்கினார். இதுகுறித்து பொதுமக்கள் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தானர். விரைந்து வந்த அவர்கள் நீரில் மூழ்கிய மணிகண்டனை தேடினர்.
ஒரு மணி நேரமாக நீரில் தேடியும் மணிகண்டன் கிடைக்கவில்லை.மேலும் இரவு நேரம் என்பதாலும் மணிகண்டனை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.இதனையடுத்து மறுநாள் காலை மீட்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிகண்டனை பிணமாக மீட்டனர். பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.