செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள் விபத்தில் சென்னை கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Published On 2021-08-02 05:53 GMT   |   Update On 2021-08-02 05:53 GMT
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள சிமெண்டு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
கும்மிடிப்பூண்டி:

சென்னை ஜபார்கான் பேட்டையை சேர்ந்தவர்கள் வசந்த குமார் (வயது 19), விக்னேஷ் (23). இருவரும் நண்பர்கள். இவர்களில் வசந்தகுமார் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். விக்னேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று வசந்தகுமார், விக்னேஷ் இருவரும் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள நீர்வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டிச்சென்றார். அவருடன் வசந்தகுமார் பின் இருக்கையில் அமர்ந்து சென்றார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள சிமெண்டு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் வசந்த குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News