செய்திகள்
ராசிபுரம் அருகே பட்டதாரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
தொட்டியவலசு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் (45), மூக்குத்திபாளையம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கோபி சங்கர் (36), நெ.3 குமாரபாளையத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பிரவீன் குமார் (36) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே மேற்குவலசு அருந்ததியர் தெருவை சேர்ந்த பட்டதாரி சரவணன் (வயது 39) என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அணைப்பாளையம் புறவழிச்சாலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் சரவணன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணையை துரிதப்படுத்தினர். அதில் சரவணனை முன்விரோதத்தில் கொலை செய்திருப்பது அம்பலமானது.
இதுதொடர்பாக தொட்டியவலசு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் (45), மூக்குத்திபாளையம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கோபி சங்கர் (36), நெ.3 குமாரபாளையத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பிரவீன் குமார் (36) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் இதுவரை தலைமறைவாக இருந்த மல்லசமுத்திரத்தை சேர்ந்த ரவி என்கிற ரவிச்சந்திரனை (22) ராசிபுரம் போலீசார் கைது செய்து திருச்செங்கோடு சிறையில் அடைத்தனர்.