செய்திகள்
வட்டி சமநிலை திட்டத்தை நடப்பு நிதியாண்டு வரை நீட்டிக்க வேண்டும் மத்திய மந்திரியிடம் ஏ.இ.பி.சி.,வலியுறுத்தல்
கொரோனாவுக்கு பின் சர்வதேச அளவில் கன்டெய்னர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கான கட்டணமும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது.
திருப்பூர்:
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் டெல்லியில் மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியுஸ்கோயலை சந்தித்து பேசினார்.
இதுகுறித்து சக்திவேல் கூறியதாவது:-ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., என்கிற சலுகை உடனடியாக கிடைக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும். வட்டி சமநிலை திட்டத்தை நடப்பு நிதியாண்டு வரை நீட்டிக்க வேண்டும். இந்திய பருத்தி கழகம் 60 சதவீத பஞ்சை, குறு, சிறு நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டும்.
இதனால் நூல் ஏற்றுமதி குறைந்து உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தட்டுப்பாடு இன்றி மூலப்பொருள் கிடைக்கும். நூல் விலையில் ஏற்படும் திடீர் உயர்வால் ஆடை உற்பத்தி துறையை கடுமையாக பாதிக்கிறது.கொரோனாவுக்கு பின் சர்வதேச அளவில் கன்டெய்னர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதற்கான கட்டணமும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி செய்த ஆடைகளை கடல் மார்க்கமாக வெளிநாட்டு வர்த்தகருக்கு அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் ஏற்றுமதியாளர்களின் தேவைகளை நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.