செய்திகள்
முக ஸ்டாலின்

கூட்டம் கூடினால் அந்த பகுதியை மூட நடவடிக்கை- மாவட்ட கலெக்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2021-07-31 03:03 GMT   |   Update On 2021-07-31 07:24 GMT
மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை முடிவடைய இருக்கும் நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இது கொரோனாவின் 3-வது அலையின் தொடக்கமாக இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று நிறைவடைய உள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, ஆகஸ்டு 9-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், புதிதாக தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும், புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவும் இல்லை.

இது தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த்தொற்று மாநிலத்தின் சில பகுதிகளில் சற்று அதிகரித்து வரும் சூழலில், நோய்த்தொற்றுப் பரவலை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்றுப் பரவல்; அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி இன்று முதல் 9-8-2021 காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதும் அதனால் நோய்த்தொற்றுப் பரவல் அபாயம் ஏற்பட்டு வருவதும் விவாதிக்கப்பட்டது.



மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்படாவிட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மேலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால், அப்பகுதி மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன்கருதி முடிவு செய்யலாம்.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். அதாவது, கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முககவசம் அணிவதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். அனைத்துக் கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும், மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்படவேண்டும். மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய்த்தொற்றுக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையாக, நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும்
கொரோனா
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு, நோய்த்தொற்றுப் பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை, வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளவேண்டும்.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதரச் செயல்பாடுகள் அனுமதி இல்லை.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், தீவிரமாக நோய்த்தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் தொடர்புடைய துறைகளால் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்கவேண்டும். வருமுன் காத்தலே விவேகம்; இது நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம்.

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

Similar News