செய்திகள்
மாசில்லா திருப்பூர்-இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள்
எதிர்கால தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப்பெரிய சொத்து, தூய்மையான வாழ்வியல் சூழலாக மட்டுமே இருக்கமுடியும்.
திருப்பூர்:
விண்ணையே தொடும் அளவு உயர்ந்து நிற்கும் புகை போக்கிகள், வாகனங்களில் இருந்து வெளிப்படும் நச்சு புகை, தீபாவளி கொண்டாட்டத்தின்போது அதிகளவில் வெடிக்கப்படும் பட்டாசுகள் இவையெல்லாம், வளிமண்டலத்துக்கே உலை வைக்கின்றன.
எதிர்கால தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப்பெரிய சொத்து, தூய்மையான வாழ்வியல் சூழலாக மட்டுமே இருக்கமுடியும். இதை உணர்ந்து ஒவ்வொருவரும், ‘வாழ்நாளில் சுற்றுச்சூழலை ஒருபோதும் மாசுபடுத்தமாட்டேன்’ என இப்போதே உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.
இந்தநிலையில் உலகுக்கு ஆடை போர்த்தி அழகு பார்க்கும் திருப்பூர் பின்னலாடை துறையினர், மரக்கன்று நடும் பேரியக்கம் மூலம் இயற்கைக்கு பசுமைப்போர்வை போர்த்தும் அறப்பணியை எப்போதோ தொடங்கி விட்டனர்.
எனவே நாட்டின் அனைத்து பகுதி தொழில்முனைவோரும் திருப்பூரை பின்பற்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பை செலுத்த வேண்டும் . அதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.