செய்திகள்
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு - முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் நன்றி
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அரசாணை பிறப்பித்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசாணை பிறப்பித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.50 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மனநிறைவளிக்கிறது.
பணி நியமனங்களிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறையாகி விட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50 சதவீதம் நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதால் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும் என பதிவிட்டுள்ளார்.