செய்திகள்
அதிமுக

அதிமுக உட்கட்சி தேர்தல்- அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது

Published On 2021-07-24 10:00 GMT   |   Update On 2021-07-24 14:42 GMT
கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் கெடு விதித்துள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம்.

ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்தபோது 2016-ம் ஆண்டு உட்கட்சி தேர்தல் நடந்தது. அப்போது பொதுச்செயலாளர் தேர்தல் முதலில் நடைபெற்றது.

அந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியின்றி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் அதிகாரியாக விசாலாட்சி நெடுஞ்செழியன் செயல்பட்டார்.

அதன் பிறகு கிளை கழகத்தில் இருந்து அ.தி.மு.க. வில் தேர்தல் நடந்தது. ஜெயலலிதா மறைந்த பிறகு மீண்டும் 2020-ம் ஆண்டு முறைபடி தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் கொரோனா காலமாக இருப்பதால் தேர்தல் நடத்தப்படவில்லை. அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமி‌ஷனில் காலஅவகாசம் கேட்டு இருந்தனர்.

இப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் கெடு விதித்துள்ளது.

அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வில் இப்போது பொதுச்செயலாளர் பதவி இல்லை. ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தான் உள்ளது. எனவே இந்த பதவிகளுக்கு கட்சி நிர்வாகிகள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்களா? என்பது பற்றிய விவரம் இனிமேல்தான் அறிவிக்கப்படும்.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் நான்தான் என்று சசிகலா தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளது.



அதேபோல் அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டதால் அவர் உட்கட்சி விவகாரத்தில் தலையிட எந்த அதிகாரமும் இல்லை என்ற வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

எனவே இந்த சூழலில் தேர்தல் கமி‌ஷன் உட்கட்சி தேர்தலை நடத்த கெடு விதித்துள்ளதால் அடுத்த மாதம் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் எப்படி நடத்தப்படும் என்ற விவரம் தெரியவரும்.

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியாக யார் நியமிக்கப்படுவார் என்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News