செய்திகள்
கோப்புபடம்

நண்பரின் மகளான 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் - 45 வயது தொழிலாளி கைது

Published On 2021-07-16 11:09 GMT   |   Update On 2021-07-16 11:09 GMT
கருமத்தம்பட்டி நண்பரின் மகளை கடத்தி திருமணம் செய்த 45 வயது தொழிலாளியை போலீசார் போக்கோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருமத்தம்பட்டி:

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வளையபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (45) பந்தல் கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 16 வயதில் ஒரு மகன் மற்றும் 14 வயதில் மகள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களாக பழனிச்சாமி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடன் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் வேலை பார்த்து வந்தார். ஒரே இடத்தில் பணியாற்றுபவர் என்ற முறையில் அந்த நபரின் வீட்டுக்கு பழனிச்சாமி அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது பழனிச்சாமிக்கு நண்பரின் 14 வயது மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி திடீரென மாயமானார்.

விசாரித்தபோது சிறுமியை பழனிச்சாமி, ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுமியையும், பழனிச்சாமியையும் தேடி வந்தனர்.

அப்போது சோமனூர் அருகே சிறுமியுடன் பழனிச்சாமி பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பழனிச்சாமியை மடக்கி பிடித்தனர். மாணவியை கடத்திச் சென்று அவரை திருமணம் செய்து கொண்டதாக பழனிசாமி தெரிவித்தார்.

இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். மாணவி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags:    

Similar News