செய்திகள்
சம்பளம் நிலுவை தொகை கேட்டு மில் தொழிலாளர்கள் போராட்டம்
நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பொன்னேரி பகுதியில் 20 ஆண்டுகளாக தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
வயது அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நிலுவை தொகை வழங்க வேண்டும். இது பற்றி நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கேட்டு வந்துள்ளனர்.
ஆனால் நிர்வாகம் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தொழிற்சாலையை வேறு ஒருவருக்கு கைமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்வாக தரப்பில் நிலுவை பணம் கண்டிப்பாக வழங்கப்படும் என தெரிவித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் நிர்வாகத்திடமும் தொழிலாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.