செய்திகள்
பிளஸ்-1 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
ஆசிரியர்கள் ‘வாட்ஸ்ஆப்’ குழு வாயிலாக மாணவர்களை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
உடுமலை:
கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் புதிய கல்வி ஆண்டுக்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டும் வருகின்றன.
இது போன்ற வகுப்புகள் காலை முதல் மாலை வரை வழக்கமான பள்ளி நேரங்களை போலவே நடத்தப்படுகின்றன.
இந்தநிலையில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்கும் என்பதால்பிளஸ் -1 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே பிளஸ் -1 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு துவக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பல பள்ளிகளில் பிளஸ்- 1 மாணவர்கள் சேர்க்கை முழுமை பெறவில்லை. அதேநேரம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக,செப்டம்பர் மாதத்தில் இருந்தே பிளஸ்-1 மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்படும். இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி தற்போது இருந்தே ஆன்லைன் வகுப்புகளை துவக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதற்கேற்ப ஆசிரியர்கள் ‘வாட்ஸ்ஆப்’ குழு வாயிலாக மாணவர்களை ஒருங்கிணைத்து வருகின்றனர் என்றனர்.