செய்திகள்
முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.86,500-ஐ சுருட்டிய வாலிபர்
எஸ்.பி.ஐ. வங்கி கணக்கில் இருந்து இளைஞர் ஒருவர் பணத்தை திருடியிருப்பது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் பாலன். 73 வயதான இவர் மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது உங்களது பி.எஸ்.என்.எல். சிம்கார்டை செயல்பட வைப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்காக குறிப்பிட்ட செயலியில் 10 ரூபாய் அனுப்புமாறு அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி பாலன் 10 ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.
சில நிமிடங்களில் பாலனின் எஸ்.பி.ஐ. வங்கி கணக்கில் இருந்து ரூ.86,500 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக பாலனின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுபற்றி அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதில் செல்போனில் பேசிய வாலிபரின் தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளார். இதனை வைத்து போலீசார் அவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் பல இடங்களில் நூதன முறையில் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பணம் வங்கி கணக்கில் செலவாகும். இதனால் வாடிக்கையாளர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த நிலையில் எஸ்.பி.ஐ. வங்கி கணக்கில் இருந்து இளைஞர் ஒருவர் பணத்தை திருடியிருப்பது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற மோசடிகளை தடுக்க வங்கி அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.