செய்திகள்
அமைச்சர் துரைமுருகன்

மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம் - அமைச்சர் துரைமுருகன்

Published On 2021-07-12 19:37 GMT   |   Update On 2021-07-12 19:37 GMT
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மேகதாது அணை விவகாரம் குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.
சென்னை:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை தடுப்பது தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. இந்த கூட்டத்தில்  மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:



மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை. குடிநீர்  விவகாரம் முக்கியமானது என்பதால்  அணை கட்டுவதற்கும், மக்களின் நலனைப் பாதுகாக்கவும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது. 

குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்ட ரீதியாக பரிசீலிக்கும். பிரச்சினைகளை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்ததால்  மேகதாது அணையை நிறுத்த எந்தக் காரணமும் இல்லை என்றார்.
 
இந்நிலையில், கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கும் வகையில் கூறியிருப்பதாவது:

மேகதாது அணையை எந்த நிலையிலும் சட்டப்படி தடுத்தே தீருவோம். ஒரு மாநிலத்திற்குள் ஓடுகின்ற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது. நதி நீர் என்பது தேசிய சொத்து என்பதை கர்நாடக அமைச்சர் அறிந்திருப்பார் என கருதுகிறேன் என்றார்.
Tags:    

Similar News