செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி - பருவக்காற்றால் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-07-12 08:33 GMT   |   Update On 2021-07-12 08:33 GMT
தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 15-ந் தேதி வரை மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை:

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவானது. இது மேலும் வலுவடைய வாய்ப்பு இல்லை என்றாலும் ஆந்திரா-ஒடிசா கடற்கரை இடையே நிலத்தை கடக்கும் என்று சென்னை வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:- இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கடலோர உள்மாவட்டங்களில் மழை வாய்ப்பு வெகுவாக குறையும். அதே நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமாக இருக்கும். இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும். 



மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். நாளை நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை வரை மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும்  15-ந் தேதி வரை மணிக்கு  50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News