செய்திகள்
கடன் வாங்கி ரூ.49½ லட்சம் மோசடி செய்த தலைமை ஆசிரியை கைது
கோவை அருகே ரூ.49½ லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த தலைமை ஆசிரியையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் கூறியதாவது:-
அன்னூர் அருகே உள்ள பொங்கேகவுண்டன்புதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மாலதி (வயது 52). இவர், சர்க்கார்சாமக்குளத்தை சேர்ந்த கார்த்திக் குமார் (32) என்பவரிடம், தன்னுடைய மகளின் திருமணத்துக்கு பணம் தேவைப்படுகிறது என்று ரூ.10 லட்சம் கடன் வாங்கினார்.
அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல், தன்னுடைய மகனின் உயர் கல்வி செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும் மேலும் ரூ.10 லட்சம் கொடுக்குமாறும், மொத்தமாக திருப்பி தந்துவிடுவதாகவும் கார்த்திக் குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் அந்த தொகையையும் கொடுத்து உள்ளார். ஆனால் அவர் ரூ.20 லட்சம் பணத்தை திரும்ப கொடுக்க வில்லை.
இதேபோல் மேலும் 6 பேரிடம் கடன் வாங்கி உள்ளார். மொத்தம் ரூ.49 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி விட்டு தலைமை ஆசிரியை மாலதி திரும்ப கொடுக்கவில்லை. பணத்தை கேட்டபோது, தலைமை ஆசிரியை காசோலை கொடுத்துள்ளார். வங்கியில் அவரது கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது.
மேலும் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த கார்த்திக்குமார் தன்னை மோசடி செய்துவிட்டதாக கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தலைமை ஆசிரியை மாலதியை கைது செய்தார். மேலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.