செய்திகள்
கர்ப்பிணிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் டீன் மலர்வண்ணன் தலைமையில் நடந்தபோது எடுத்தபடம்.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-07-07 10:38 GMT   |   Update On 2021-07-07 10:38 GMT
தமிழகம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம்:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியதோடு பலர் பலியாகி உள்ளனர். இந்த தொற்றினை தடுக்கும் வகையில் தடுப்பூசி கண்டறியப்பட்டு முதல் கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அதனை தொடர்ந்து 45 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

நோயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போட முடிவு செய்து முன்பதிவு அடிப்படையில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த 2-வது கொரோனா பேரலையின்போது ஏராளமான கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு பலர் பலியான சம்பவம் நடந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதை இயக்கமாக மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

ராமநாதபுரம் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமினை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் மலர்வண்ணன் தொடங்கி வைத்தார்.

இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, உதவி மருத்துவ அலுவலர்கள் டாக்டர் மனோஜ் குமார், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, தேவிபட்டினம் வட்டார மருத்துவ அலுவலர் எபினேசர் செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News