செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நீட் தேர்வு விவகாரம்... மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Published On 2021-07-05 09:40 GMT   |   Update On 2021-07-05 11:58 GMT
விளம்பரம் மற்றும் அரசியல் நோக்கத்திற்காக பாஜக வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், அதில் பொதுநலன் இல்லை என்றும் வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
சென்னை:

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். யூகத்தின் அடிப்படையிலும், அரசியல் நோக்கதுடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

அதன்பின்னர் இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக இணைக்க கோரி மாணவர்கள், திமுக, மதிமுக, சிபிஎம், விசிக மற்றும் ஆசிரியர் பிரின்ஸ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 


 
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி ஒருவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பாஜகவின் இந்த வழக்கு, விளம்பரம் மற்றும் அரசியல் நோக்கத்திற்காக தொடரப்பட்டிருப்பதாகவும், அதில் பொதுநலன் இல்லை என்றும் வாதிட்டார். 

தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த வழக்கில் வாதாட தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக மத்திய அரசு ஜூலை 8ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். அத்துடன், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியும், மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரிடம் தனித்தனியாக வாதங்களை பெற வேண்டி இருப்பதாலும் வழக்கின் விசாரணையை ஜூலை 13ம் தேதி விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

Tags:    

Similar News