பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
கோவை:
பொள்ளாச்சி திப்பம்பட்டி அண்ணா வீதியை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 40). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் உடையம்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அறைக்கு சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த பணம் ரூ.4800-யை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மணிவாசகம் கோமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வந்தனர்.அப்போது சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மாரிமுத்து (27) மற்றும் பழனிசாமி (43) என்பதும் அவர்கள் மணிவாசகம் வெளியூர் செல்வதை தெரிந்து கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொள்ளையர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.