செய்திகள்
கேஎஸ் அழகிரி

நீட் தேர்வுக்கு அதிமுக அரசுதான் காரணம்: காங்கிரஸ் மீது பழி சுமத்தி திசை திருப்புவதா? பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

Published On 2021-06-28 08:20 GMT   |   Update On 2021-06-28 08:20 GMT
நீட் தேர்வு குறித்து இத்தகைய கேள்வியை எழுப்புவதற்கு அ.தி.மு.க.வினருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. தமிழகத்தில் நீட் தேர்வைத் திணித்தது பா.ஜ.க.வும் அ.தி.மு. க.வும் தான் என்பதற்கு நிறைய ஆதாரங்களைக் கூற முடியும் என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்குப் பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமாகப் பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் திரும்பத் திரும்பப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சி மீது பழிபோட அ.தி.மு.க. முயல்கிறது. 

நீட் தேர்வு குறித்து இத்தகைய கேள்வியை எழுப்புவதற்கு அ.தி.மு.க.வினருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. தமிழகத்தில் நீட் தேர்வைத் திணித்தது பா.ஜ.க.வும் அ.தி.மு. க.வும் தான் என்பதற்கு நிறைய ஆதாரங்களைக் கூற முடியும். இந்தியா முழுவதும் நீட் தேர்வைக் கட்டாயமாக்குகிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா, 2016 மக்களவையிலும், மாநிலங்கள வையிலும் நிறைவேறுவதை எதிர்த்து அ.தி.மு.க. வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது ஏன்? பா.ஜ.க. அரசின் சட்டபூர்வமான 
நீட்
 திணிப்பை எதிர்த்து வாக்களிக்க மக்களவையில் 39 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் கொண்ட அ.தி.மு.க.விற்கு துணிவில்லாமல் போனது ஏன்? மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தது மசோதாவை ஆதரிப்பதற்கு சமமாகும்.

எனவே, நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 16 தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு மோடி அரசும், எடப்பாடி அரசும் தான் பொறுப்பாகும். இவை வெறும் தற்கொலைகள் அல்ல. அன்றைய ஆட்சியாளர்களின் தவறான அரசியல் அணுகுமுறைகளால் ஏற்பட்ட படுகொலைகள். 

தமிழகத்தில் உள்ள 25 மருத்துவக்கல்லூரிகளில் 3,400 இடங்கள் உள்ளன. இதில் உள் ஒதுக்கீட்டின்படி 405 இடங்களில் தான் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மீதி 3,000 இடங்களைத் தட்டிப் பறித்தது யார்? அரசுப் பள்ளிகளில் படிக்காத மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் உள்ள சமூக அநீதிக்கு மத்திய பா.ஜ.க. அரசும், அன்றைய அ.தி.மு.க. அரசும் தான் பொறுப்பாகும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு 
அ.தி.மு.க. அரசு செய்த துரோகத்தை எடப்பாடி பழனிசாமி ஆயிரம் அறிக்கைகள் விட்டாலும் மூடிமறைக்க முடியாது. 



தமிழ் சமுதாய மாணவர்களின் எதிர்காலத்தை நீட் தேர்வு திணிப்பின் மூலம் பாழடித்த பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்கவே மாட்டார்கள். அதற்கான உரிய பாடத்தை 2019 மக்களவை தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வழங்கியதை எடப்பாடி பழனிசாமி மறந்துவிடக் கூடாது.

எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மத்தியில் 2014-ல் இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு தமிழகத்தில் 2017-ல் எடப்பாடி ஆட்சியில் தான் நீட் தேர்வு முதல் முறையாகத் திணிக்கப்பட்டது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News