செய்திகள்
தொற்று கட்டுக்குள் வந்ததால் குறைந்த ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பாடு
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் பயன்பாடு மற்றும் அதன் விலை குறைய துவங்கியுள்ளது.
பல்லடம்
கொரோனா இரண்டாம் அலையில் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை ஒரு புறமும், நோயாளிகளின் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கான ஆக்சிஜன் தேவை மற்றொரு புறமுமாக தட்டுப்பாட்டை அதிகரிக்க செய்தன.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் இரு மடங்காக உயர்ந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர் விலை குறைந்து விட்டது.
இதுகுறித்து பல்லடம் தனியார் ஏஜென்சி உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,
கொரோனா இரண்டாம் அலை துவக்கத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது.அதனால் வழக்கமாக வழங்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிலிண்டர் வழங்க முடியாத சூழல் உருவானது.ரூ.230 ஆக இருந்த 55 கிலோ கொண்ட சிலிண்டர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ.440 ஆனது.
இதனால் விற்பனை விலை ரூ. 730ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு குறைந்துள்ளது. ஒரு சிலிண்டர் ரூ.460க்கு விற்கப்படுகிறது என்றார்.