செய்திகள்
விபத்து

திருச்சிற்றம்பலம் அருகே விபத்து- என்ஜினீயர் பலி

Published On 2021-06-25 09:08 GMT   |   Update On 2021-06-25 09:08 GMT
திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சிற்றம்பலம்:

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள இடையாத்தி ஊராட்சி மந்திகோன் விடுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 23). என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளங்கண்ணன் (28) என்பவரும் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சின்ன ஆவுடையார்கோவில் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை வசந்தகுமார் ஓட்டி வந்தார்.

திருவோணம் ஒன்றியம் தளிகைவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மற்றும் அவரது நண்பர் பாலச்சந்தர் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பூவணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டயங்காடு பிரிவு சாலையில் எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மேலும் படுகாயமடைந்த இளங்கண்ணன், ஜெயபால், பாலச்சந்தர் ஆகிய 3 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News