செய்திகள்
நூல் விலை உயர்வு குறித்த ஆய்வுக்கு உதவ தயார்-ஏ.இ.பி.சி.,அறிவிப்பு
மூலப்பொருள் விலை சீராக தொடர்வதால் ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர் புதிய ஆர்டர்களை திட்டமிட்டு கையாளமுடியும்.
திருப்பூர்:
பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பருத்தி நூல் விலை திடீர் அதிகரிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதற்கு உதவ தயாராக உள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் (ஏ.இ.பி.சி.,) அறிவித்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் ஏ.இ.பி.சி.,தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பருத்தி நூல் விலை உயர்வின் பின்புலத்தை கண்டறியும் ஜவுளி அமைச்சகத்தின் நோக்கம் வரவேற்கத்தக்கது. நூல் விலை உயர்வு குறித்து மூன்றாம் தரப்பு நடத்தும் ஆய்வுக்கு அரசுக்கு தேவையான அனைத்து வகை உதவிகளையும் செய்து தர ஏ.இ.பி.சி., தயாராக உள்ளது.
எதிர்காலத்தில் கணிக்க முடியாத அளவில் நூல் விலை உயர்வதை தடுக்க இந்த முயற்சி கைகொடுக்கும். மூலப்பொருள் விலை சீராக தொடர்வதால் ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர் புதிய ஆர்டர்களை திட்டமிட்டு கையாளமுடியும். ஆடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்தும்.
அரசின் இந்த நடவடிக்கைகளால் தொழிலாளரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். குறு, சிறு, நடுத்தர ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், வர்த்தக சவால்களை எதிர்கொள்ளும் திறன் பெறும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.