செய்திகள்
சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு
பரிசு போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் ‘தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்சாலை, எழும்பூர், சென்னை-600008' என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ அனுப்பி பெறலாம்.
சென்னை:
தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ், பரிசுப்போட்டிக்கு 2020-ம் ஆண்டில் தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன.
போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.
பரிசு போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் ‘தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்சாலை, எழும்பூர், சென்னை-600008' என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ அனுப்பி பெறலாம். அஞ்சல் வாயிலாக பெற சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10-க்கான அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்ப வேண்டும்.
இதுதவிர www.tamilvalarchithurai.com என்ற இணையதளம் வாயிலாக இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்சொன்ன முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். மேலும் விவரங்களுக்கு 28190412, 28190413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.