செய்திகள்
திருப்பூரில் இந்த மாதம் மின்கணக்கீடு எடுக்கப்படாது-அதிகாரி தகவல்
புதிய இணைப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாத கட்டணம் கணக்கிடப்படும்.
திருப்பூர்:
கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மின்கணக்கீடு எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பி.எம்.எஸ்., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், நாகப்பட்டினம், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இம்மாதம் மின்சாரம் கணக்கீடு எடுக்க வேண்டியதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்:
2019 ஜூன் மாத மின் கட்டணம் இம்மாத கட்டணமாக நிர்ணயிக்கப்படும். புதிய இணைப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாத கட்டணம் கணக்கிடப்படும். கட்டணம் அதிகம் என நினைத்தால் நுகர்வோர், ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக நடப்பு மாத கணக்கீடு அளவை அனுப்பி வைக்கலாம். மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் கணக்கீடு அளவை வழங்கி கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம்‘ என்றனர்.