செய்திகள்
கோப்புபடம்

வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் டீக்கடைக்காரர் தற்கொலை

Published On 2021-06-20 10:37 GMT   |   Update On 2021-06-20 10:37 GMT
வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர், டீக்கடை உரிமையாளர் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.
நச்சலூர்:

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி, பாளையத்தான் தோட்டம் பகுதியை சேர்ந்த வர் அண்ணாவி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 32). இவர் நாமக்கலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இதையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். ராஜ்குமாருக்கு ரத்த புற்று நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பல மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜ்குமார் கடந்த 18-ந்தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணாவி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சர்க்கரைநோய் மற்றும் நெஞ்சில் சளி இருந்து வந்துள்ளது. இதனால் நீண்ட நாட்களாக வீட்டிலிருந்த படியே மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை சிவக்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள செல்போன் டவரில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொைல குறித்து மோகன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News