செய்திகள்
ஊஞ்சல் விளையாடிய போது சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுவன் பலி
பள்ளி சிறுவர்கள் வீட்டு அருகில் உள்ள மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது
திருப்பூர்:
சேலம் மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன்( வயது 36). இவர் தனது மனைவி செண்பகவல்லி (28) , குழந்தைகள் மித்ரன்(10), பிரசன்னா(6) ஆகியோருடன் திருப்பூர் மாவட்டம் பளவஞ்சிபாளையம் சிவசக்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் சிவசக்தி நகர் பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவர்கள் வீட்டு அருகில் உள்ள மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. மித்ரனும் அங்கு விளையாடி வந்துள்ளான்.
சம்பவத்தன்று மித்ரன் ஊஞ்சலை சுற்றி சுற்றி விளையாடியதாக தெரிகிறது. வேகமாக சுற்றியதில் மித்ரன் கழுத்தை சேலை இறுக்கியது. இதில் மயங்கி கிடந்த மித்ரனை வெங்கடேஸ்வரன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மித்ரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.