செய்திகள்
கொரோனா தொற்றில் இருந்து 2,869 பேர் மீண்டனர்
வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் வழங்கி அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. நேற்று புதிதாக 489 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் மொத்த பாதிப்பு 78,243 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் நேற்று ஒரே நாளில் 2,869 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் இதுவே அதிகம்.
இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை மொத்தம் 71,049ஆனது. தற்போது 6,509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11ஆயிரமாக இருந்தது. தற்போது வெகுவாக குறைந்து 6,509 ஆகியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 4 பேர் இறந்தனர். இதனால் மாவட்ட அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 688ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. அதனை தடுக்கும் வகையில் வாக்காளர்பட்டியல் அடிப்படையில் டோக்கன் வழங்கி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.