காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் பலி - குடும்பத்தினர் பிரிந்த வேதனையில் தற்கொலை
கோவை:
கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 24). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது குடும்பத்தைப் பிரிந்து கோவை வந்தார். பின்னர் இங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
பிரதீப் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததால் மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் நடந்து காந்திபுரம் வந்துள்ளார். அங்கு வந்த அவர் 100 அடி சாலை இரண்டடுக்கு மேம்பாலத்தின் மீது சென்றார். அப்போது திடீரென விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பாலத்தின் மேலே இருந்து கீழே குதித்தார்.
இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் பிரதீப் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.