செய்திகள்
கடையம் அருகே டிரைவர் வீட்டை சேதப்படுத்திய 8 பேர் கைது
கடையம் அருகே டிரைவர் வீட்டை சேதப்படுத்தியது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
கடையம் அருகே உள்ள புலவனூரை சேர்ந்தவர் செல்லத்துரை(வயது 38).ஆட்டோ டிரைவர். இவரது வீட்டின் முன் முகப்பு அங்குள்ள ஆலயத்தை மறைப்பதாக கூறி கடந்த 2 வருடத்திற்கு முன்பு செல்லத்துரைக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகாரும் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் செல்லத்துரை வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர். இதுதொடர்பாக செல்லத்துரைக்கு ஆதரவாக இந்து முன்னணியினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து செல்லத்துரை தரப்பினரிடம் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 8 பேர் கும்பல் செல்லத்துரையின் ஆட்டோ மற்றும் வீட்டினை சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதுதொடர்பாக அப்பாத்துரை, தேவகிறிஸ்டின், பால்ராஜ், ராஜ், ஜேசுதாஸ், டேனியல், மற்றொரு செல்லத்துரை, மாசிலாமணி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.