செய்திகள்
அடவிநயினார் அணை

அடவிநயினார் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

Published On 2021-06-17 11:28 GMT   |   Update On 2021-06-17 11:28 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்‌ பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் 131 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 133.10 அடியாக உள்ளது. அணைக்கு 2 ஆயிரத்து 695 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,205 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

156 கன அடி முழுக்கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 140.48 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 144.85 அடியானது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 387 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 675 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடனாநதி அணை 74.90 அடியாகவும், ராமநதி அணை 66 அடியாகவும், கருப்பாநதி அணை 60.70 அடியாகவும் உள்ளது.

அடவிநயினார் அணைப்பகுதியில் நேற்று 23 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் 94 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 100.2 அடியாக அதிகரித்தது.

செங்கோட்டை, புளியரை பகுதியில் பெய்த மழையில் 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை முழுவதும் நிரம்பி வழிகிறது. அணைக்கு வருகின்ற தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. குற்றாலம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அடவிநயினார்-23, பாபநாசம்-42, சேர்வலாறு-15, கருப்பாநதி-16, குண்டாறு-42, சங்கரன்கோவில்-2, கடனா-4, தென்காசி-13, செங்கோட்டை-19, ஆய்குடி-2.
Tags:    

Similar News