செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட சாந்தினி தனது கணவருடன் எடுத்த படம்.

களக்காடு அருகே காதல் திருமணம் செய்த நர்ஸ் தற்கொலை

Published On 2021-06-16 08:17 GMT   |   Update On 2021-06-16 08:17 GMT
நர்ஸ் சாந்தினி நேற்று மதியம் தனது பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் பிரச்சினை நடப்பதாக தெரிவித்துள்ளார்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள மீனவன்குளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் ரெனிஸ் (25). கட்டிட தொழிலாளி. நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்தை சேர்ந்த வைகுண்டராஜன் மகள் சாந்தினி(21).

களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாந்தினி நர்சாக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், ரெனிஸ்க்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் சாந்தினி நேற்றிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் அவரது கணவர் உள்பட யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. சாந்தினியின் உடல் மட்டும் கிடந்துள்ளது.

முன்னதாக நேற்று மதியம் சாந்தினி தனது பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் பிரச்சினை நடப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் இரவில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை வைகுண்டராஜன் களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசா, இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரெனிசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே கணவருடன் ஏற்பட்ட தகராறில் சாந்தினி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வரதட்சணை பிரச்சினை உள்ளிட்ட வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாந்தினிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.



Tags:    

Similar News