செய்திகள்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மோட்டார் சைக்கிளை பாடையில் வைத்து மாலை போட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
திருப்பூர்:
பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டாம் மண்டல செயலாளர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைச்செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் நரேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மோட்டார் சைக்கிளை பாடையில் வைத்து மாலை போட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி இளைஞர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லிட்டர் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மோட்டார் சைக்கிளில் வியாபாரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நிலை நீடித்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.