நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் குத்திக்கொலை
என்.ஜி.ஓ. காலனி:
நாகர்கோவில் அருகே பறக்கை சர்ச் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 24), கட்டிடத்தொழிலாளி.
இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அய்யப்பனின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
அய்யப்பனும் பறக்கை எம்.எம்.பி. தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பவரும் நண்பர்கள். இருவரும் நேற்று மாலை பறக்கை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் இவர்களை வழி மறித்து சரமாரியாக தாக்கினர்.
அய்யப்பனை கத்தியாலும் குத்தினர். சந்தோசுக்கும் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அய்யப்பன் பரிதாபமாக இறந்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சந்தோசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அய்யப்பனை கக்கன் புதூரைச்சேர்ந்த ஸ்டாலின் (24), சுரேஷ் (23), பிரபு (24) ஆகியோர் கொலை செய்திருப்பதும் தெரியவந்ததையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாகி உள்ள ஸ்டாலின் குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
தற்போது கக்கன்புதூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. திருவட்டார் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட அய்யப்பனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.