செய்திகள்
உடுமலையில் மழையால் காய்கறி விற்பனை பாதிப்பு
வியாபாரிகள் சிலர் காய்கறிகளை எடுத்து வைக்கும் கூடைகளை தலைக்கு மேலே குடைபோன்று பிடித்துக்கொண்டு வியாபாரம் செய்தனர்.
உடுமலை:
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளின்படி காய்கறி கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து உடுமலையில் ராஜேந்திரா சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் திறந்த வெளியில் காய்கறிகடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று உடுமலையில் மழை பெய்தது. இதனால் உழவர் சந்தைக்கு முன்பு கபூர்கான் வீதியில் காய்கறி கடைகள் வைக்கப்படும் சில இடங்களில் மழைத்தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக காய்கறி கடைகளில் நேற்று வியாபாரம் மிகவும் குறைவாக இருந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனர். சில வியாபாரிகள் குடைகளை பிடித்தபடி வியாபாரம் செய்தனர். சிலர் காய்கறிகளை எடுத்து வைக்கும் கூடைகளை தலைக்கு மேலே குடைபோன்று பிடித்துக்கொண்டு வியாபாரம் செய்தனர்.
மழையினால் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்களின் வருகை குறைவாக இருந்தது. இதே போன்று மழையினால் ராஜேந்திரா சாலை உள்ளிட்ட மற்ற சாலை பகுதிகளிலும் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த கடைகளில் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டது.