செய்திகள்
விக்னேசுவரன்

மதுவிருந்தில் நண்பர்களுக்குள் மோதல்- வாலிபர் கொலை

Published On 2021-06-15 02:41 GMT   |   Update On 2021-06-15 02:41 GMT
சோழவந்தான் அருகே மதுவிருந்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். டாஸ்மாக் கடை திறந்த அன்றே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
சோழவந்தான்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் விக்னேசுவரன் என்ற விக்கி (வயது 26). இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று மதியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் விக்னேசுவரனும், அவரது நண்பர்களும் மது விருந்துக்கு ஏற்பாடு செய்து, ஒன்றாக அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று மதுக்கடை திறக்கப்பட்டதால் சற்று முன்னதாக சென்று மதுவாங்கி வந்துள்ளனர்.

மதுபோதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நண்பர்கள், விக்னேசுவரனை சரமாரியாக கத்தியால் குத்தி, வேறு ஆயுதங்களாலும் தாக்கி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விக்னேசுவரன் பரிதாபமாக இறந்தார். இதைதொடர்ந்து அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் விக்னேசுவரன் பிணத்தை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை திறந்த அன்றே மது விருந்து வைத்து அதனால் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News