செய்திகள்
கோப்புபடம்

சிறுமிகளை திருமணம் செய்த 2 பேர் கைது

Published On 2021-06-14 17:02 GMT   |   Update On 2021-06-14 17:02 GMT
திருச்சியில் சிறுமிகளை திருமணம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி தென்னூர் சின்னசாமிநகரை சேர்ந்தவர் மாரி. இவருடைய மகன் சூர்யா (வயது 24). முறுக்கு வியாபாரி. மாரி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாய் பெண் பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியின் 11 வயது மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அந்த சிறுமியின் அண்ணனான 17 வயது சிறுவனுக்கு சூர்யாவின் உறவுக்கார பெண்ணான 17 வயது சிறுமியை திருமணம் செய்து (பெண் கொடுத்து பெண் எடுக்க) வைக்க முடிவு செய்தனர்.

கடந்த 6 மாதத்துக்கு முன்பு 17 வயது சிறுவனுக்கு திருமணம் நடந்தது. கொரோனா ஊரடங்கில் சில நாட்களுக்கு முன்பு 11 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது. இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சைல்டு லைனுக்கு புகார் அளித்தனர்.

இரு நாட்களுக்கு முன்பு அங்கு சென்ற அதிகாரிகள் 2 சிறுமி மற்றும் 17 வயது சிறுவனை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் சூர்யா மீது வழக்கு பதிவு செய்தும், 17 வயது சிறுவன் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சூர்யாவை சிறையிலும், 17 வயது சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர்.

இதில் 11 வயது சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 17 வயது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News