செய்திகள்
மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு: குமரியில் வீடுகள் முன்பு பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் பா.ஜனதாவினர் தங்கள் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி 27 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமரி மாவட்டத்திலும் பா.ஜனதா நிர்வாகிகள் அனைவரும் தங்களது வீடுகள் முன் கருப்பு கொடி ஏந்தியும், கண்டன பதாகை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகர்கோவில் சற்குணவீதி சிதம்பரநாதன் தெருவில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வீட்டின் முன்பு அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளாடிச்சிவிளையில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் கருப்பு கொடி மற்றும் டாஸ்மாக் எதிர்ப்பு பதாகைகளுடன் போராட்டம் நடத்தினார். செட்டிகுளத்தில் முன்னாள் நகர் மன்ற தலைவி மீனாதேவ் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நடைக்காவு பகுதியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
தோவாளை ஒன்றிய மேற்கு பா.ஜனதா சார்பில் அழகியபாண்டியபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்த்தாண்டம் பம்மத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதாவினர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். கன்னியாகுமரியில் சுவாமிநாதபுரத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபோல், ஆரல்வாய் ெமாழி, களியக்காவிளை, குழித்துறை, மேல்புறம், குளச்சல், உள்பட மாவட்டம் முழுவதும் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.