செய்திகள்
காரில் வருபவர்களுக்கு மட்டும் தடுப்பூசி-பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருப்பூர் மாவட்டத்திற்கு 2500 தடுப்பூசிகள் சுகாதார துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக தடுப்பூசி போட வருபவர்களுக்கு எளிதாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து தடுப்பூசி போட பொதுமக்கள் பலரும் ஆர்வம் காட்டினர். இதனால் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் 2500 தடுப்பூசிகள் சுகாதார துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து 5 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் தடுப்பூசி செலுத்தும்பணி தொடங்கியது.
திருப்பூர் சூசையாபுரம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 5 மணி முதல் தடுப்பூசி செலுத்துவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் அங்கு முறையாக தடுப்பூசி செலுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காரில் வருபவர்களுக்கும், வேண்டியவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்துகின்றனர். ஏழை எளிய மக்களை கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.