செய்திகள்
டீக்கடைகள்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலானது- டீக்கடைகள் திறக்கப்பட்டன

Published On 2021-06-14 02:08 GMT   |   Update On 2021-06-14 12:11 GMT
அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா பரவலை முற்றிலுமாக தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு அதாவது வருகிற 21-ந்தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேலும் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில், அழகுநிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.



அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைகான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மின்பொருட்கள் (எலக்ட்ரிக்கல்ஸ்), ஹார்டுவேர்ஸ், நோட்டு புத்தகம், விற்பனை, ஆட்டோமோபைல் உதிரி பாகங்கள் விற்பனை, 2 சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதேபோல் வீட்டு உபயோக பொருட்களான டி.வி., மிக்சி, கிரைண்டர் மற்றும் பிரிட்ஜ் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள், செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படலாம்.

வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். தொழிலாளர்கள் 4 சக்கர வாகனங்களுக்கு பதிலாக, தங்களுடைய 2 சக்கர வாகனங்களில் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்றுவர அனுமதிக்கப்படுவர்.

தகவல்தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவீத பணியாளர்களுடனும், வீட்டு வசதி நிறுவனம் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இந்தநிலையில், தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் இன்று முதல், டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை டீக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

பார்சல் முறையில் டீ வாங்க வரும் பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டுவந்து பெற்றுச்செல்லுமாறும், பிளாஸ்டிக் பைகளில் டீ பெறுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடைகளின் அருகே நின்று டீ அருந்த அனுமதி இல்லை.


மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு - கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித்தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News