செய்திகள்
தற்போதைய சூழலில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை சந்திப்பது மாணவர்களுக்கு சவாலானது - ஓபிஎஸ்
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்ற சூழ்நிலையில், நீட் தேர்வு நடத்தப்படுவது மாணவர்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
'மருத்துவக்கல்வி உள்பட அனைத்து உயர் கல்விக்கும் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்ற சூழ்நிலையில், நீட் தேர்வு நடத்தப்படுவது மாணவர்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அரசுப் பள்ளியில் நீட் தேர்வு பயிற்சியை நடத்துவதன் மூலம், நீட் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசே நினைக்கிறதோ என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் நிலவுவதாகவும் தற்போதைய சூழ்நிலையில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை சந்திப்பது மாணவர்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய சவால் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்-அமைச்சர் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்வி உட்பட அனைத்து உயர்கல்விக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதிசெய்யவும், இலவச நீட் பயிற்சி என கூறி மாணாக்கர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.