செய்திகள்
மழை

குமரியில் மீண்டும் மழை- அடையாமடையில் 62 மி.மீ. பதிவு

Published On 2021-06-09 10:22 GMT   |   Update On 2021-06-09 10:22 GMT
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.58 அடியாக இருந்தது. அணைக்கு 875 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் நேற்று மாலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது.

அடையாமடை பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 62 மி.மீ. மழை பதிவானது. நாகர்கோவிலிலும் நேற்றிரவு விட்டு விட்டு மழை பெய்தது. பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய்மொழி, கோழிப்போர் விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அருவியிலும் வெள்ளம் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அணை பகுதியிலும், மலையோர பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சிற்றாறு-1 அணை நிரம்பி வருகிறது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.58 அடியாக இருந்தது. அணைக்கு 875 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.46 அடியாக உள்ளது. அணைக்கு 631 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 404 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து 537 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு-2 அணையின் நீர் மட்டம் 16.70 அடியாக உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 26.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழி கிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பேச்சிப்பாறை-32.2, பெருஞ்சாணி-4, சிற்றாறு-1-38, சிற்றாறு-2-37, மாம்பழத்துறையாறு-15, நாகர்கோவில்-9.8, பூதப்பாண்டி-11.4, சுருளோடு-11.2, கன்னிமார்-31.2, ஆரல்வாய்மொழி-3.6, பாலமோர்-22.4, நிலப்பாறை-7, ஆணைக்கிடங்கு-13.4, அடையாமடை- 62, கோழிப்போர் விளை-13, முள்ளங்கினாவிளை-5, புத்தன் அணை-3.4, திற்பரப்பு-20.



Tags:    

Similar News