செய்திகள்
குறுவை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
ஜூலை மாத தொடக்கத்தில் குறுவை பருவத்துக்கான நடவு மேற்கொள்ளப்படும். தென்மேற்குபருவமழை குறித்த நேரத்தில் துவங்கினால் சாகுபடியில் நிலையான விளைச்சல் கிடைக்கும்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதிகளில் அமராவதி அணையின்நீர் இருப்பை அடிப்படையாக கொண்டு சாகுபடி நடக்கிறது. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அணையில் இருந்து ஆற்றிலும், புது ஆயக்கட்டு பாசனத்துக்கு பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் குறுவை, சம்பா என இரண்டு பருவங்களில் நெல் முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. உத்தேசமாக 6 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடவு செய்யப்பட்டு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் நெல் பெருமளவு தற்காலிக அரசு நேரடி கொள்முதல் மையத்தில் விற்கப்படுகிறது. தற்போது சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, உள்ளிட்ட கிராமங்களிலுள்ள பழைய ஆயக்கட்டு கால்வாயில் பாசன வசதி பெறும் விளைநிலங்களில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக விளைநிலத்தை உழுது சமன் செய்து நாற்றங்கால் அமைக்க நீர் தேக்கி உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நெல் சாகுபடியின் முதல்கட்டமாக நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக மடத்துக்குளம் வட்டார வேளாண்மைதுறையினரிடமிருந்து கோ-51 ரக நெல் விதைகள் மற்றும் தேவையான இடுபொருட்கள் மானிய விலையில் வாங்கி வந்து உள்ளோம்.
ஜூலை மாத தொடக்கத்தில் குறுவை பருவத்துக்கான நடவு மேற்கொள்ளப்படும். அணையில் நடப்பாண்டு நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பு இருப்பதுடன் தென்மேற்கு பருவமழையும் குறித்த நேரத்தில் துவங்கினால்சாகுபடியில் நிலையான விளைச்சல் கிடைக்கும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.