செய்திகள்
அபராதம்

தர்மபுரியில் ஊரடங்கை மீறி திறந்த 40 கடைகளுக்கு அபராதம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2021-06-09 03:11 GMT   |   Update On 2021-06-09 03:11 GMT
பொதுமக்கள் வெளியே வரும்போது முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தர்மபுரி:

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி, எலக்ட்ரிக்கல்ஸ், ஹார்டுவேர்ஸ் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. பொதுமக்கள் வெளியே வரும்போது முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். அரசு அனுமதித்துள்ள கடைகள் மட்டும் திறக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை, ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த நிலையில் தர்மபுரி நகரில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடைகளை திறந்து வியாபாரம் செய்வதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், சுசீந்திரன், நாகராஜன், ரமணசரண் மற்றும் ஊழியர்கள் நகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தர்மபுரி அப்துல் முஜீப் தெரு பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த காலணி கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கடையை பூட்டினர். இதேபோன்று தர்மபுரி பி.ஆர். ஸ்ரீனிவாச ராவ் தெரு பகுதியில் திறந்திருந்த பேன்சி ஸ்டோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கடை பூட்டப்பட்டது. நகரம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த எலக்ட்ரானிக்ஸ் கடை, செல்போன் கடை உள்ளிட்ட 40 கடைகளுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்ெகாண்டனர்.
Tags:    

Similar News