செய்திகள்
மணிகண்டன், நடிகை சாந்தினி (கோப்புப்படம்)

மனஉளைச்சல் அடைந்துள்ளோம்: நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி புகார்

Published On 2021-06-01 13:06 GMT   |   Update On 2021-06-02 08:20 GMT
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மலேசியா நாட்டைச் சேர்ந்த நடிகை சாந்தினி, சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். இவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி புகார் அளித்தார்.

அதனடிப்படையில் மே 30-ம் தேதி அடையாறு அனைத்து மகளிர் போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், கருக்கலைத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனையடுத்து சென்னை தனிப்படை போலீசார் விசாரணை செய்வதற்காக மணிகண்டன் வசிக்கும் மதுரை அண்ணாநகர் வீடு, சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு சென்று தேடினர்.


ராமநாதபுரத்தில் மணிகண்டனின் தந்தை, தாய் வசிக்கும் வீடும் பூட்டப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைப்பாணை வழங்க போலீசார் மணிகண்டனை தேடி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிகண்டனின் மனைவி டாக்டர் வசந்தி இன்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக்கிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் ‘‘நடிகை சாந்தினி தனது கணவர் மணிகண்டன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் அவதூறாகப் புகார் அளித்துள்ளார். இதனால் எங்கள் குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சல் அடைந்துள்ளோம். எனவே நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் கூறியதாவது, ‘‘முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி புகார் மனு அளித்தார். இதுதொடர்பான வழக்கு சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மனுவை சென்னை காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ளோம்’’ என்றார்.
Tags:    

Similar News