செய்திகள்
கந்து வட்டி கொடுமை: நெசவு தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து கொலை மிரட்டல்
நெசவு தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது41). நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (37). இவர்கள் தங்களது குடும்ப தேவைக்காக ஆண்டிப்பட்டி சீனிவாசநகர் பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பியான ரமேஷ், பிரதீஸ் ஆகியோரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கினர். இதனிடையே கொரோனா காலம் என்பதால் முருகேசன் வட்டி பணத்தை சரிவர கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ரமேஷ், பிரதீஸ் ஆகியோர் முருகேசனையும், லட்சுமியையும் தங்களது வீட்டுக்கு அழைத்து வந்து, வாங்கிய கடனுக்கு வட்டியும் அசலுமாக சேர்த்து ரூ.1 லட்சம் திருப்பி தரவேண்டும் என்றும், அதுவரை முருகேசனை வெளியே விட முடியாது என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் முருகேசனை வீட்டு்க்குள் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து லட்சுமி ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் ரமேஷ் மற்றும் பிரதீஸ் ஆகிய 2 பேர் மீது கந்துவட்டி கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.