செய்திகள்
ஊரடங்கை நீட்டித்தால் ரூ.2500கோடி ஆடை வர்த்தகம் பாதிக்க வாய்ப்பு
ஊரடங்கை நீடித்தால் பின்னலாடை வர்த்தகம் ரூ.2500 கோடி வரை பாதிக்க வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க தலைவர் ராஜா சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐரோப்பியா, அமெரிக்காவில் கொரோனாதடுப்பு ஊரடங்கை முடித்து விட்டனர். இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்து சென்றால் பின்னலாடை நிறுவனங்கள் கடுமையான வர்த்தக பாதிப்பை சந்திக்க நேரிடும். வெளிநாட்டு வணிகர்கள் ஊரடங்கால் அச்சமடைகின்றனர்.
இதனால் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய ஆர்டர்கள் பிற நாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட் டுள்ளது. இதன் மூலம் இந்திய பின்னலாடை தொழில் முடங்கி விடும். பின்னலாடை நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கியதால் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 10 லட்சம் பேரின் வாழ்வாதாரமாக உள்ளது. சீசன் ஆர்டர்கள் இந்தியாவிற்கு கிடைக்காவிடில் திருப்பூரில் மட்டும் மாதம் ரூ.2500 கோடி வர்த்தகம் பாதிக்கும். அரசால் கொடுக்க முடியாத வேலை வாய்ப்பை தொழில் நிறுவனங்கள் வழங்குகிறது. வீட்டில் இருந்தாலும் கொரோனா பாதிக்கத்தான் செய்கிறது. ஆர்டர்கள் இல்லாமல் போனால் கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரும் தொழில் துறை வீழ்ச்சி அடைந்தே இருக்கும்.
ஊரடங்கு தொடர்ந்தால் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.எனவே ஊரடங்கு விதிகளை பின்பற்றி வருகிற 24-ந்தேதி முதல் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.