செய்திகள்
கொலை

திங்கள் நகரில் கள்ளக்காதல் தகராறில் மீன் வியாபாரி கொலை

Published On 2021-05-19 06:21 GMT   |   Update On 2021-05-19 06:21 GMT
கள்ளக்காதல் தகராறில் மீன் வியாபாரி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இரணியல்:

திங்கள் சந்தை அருகே இரணியல் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் சுஜித் (வயது 28) திருமணம் ஆகவில்லை. இவர் திங்கள் சந்தையில் உள்ள மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

சுஜித் நேற்று மாலை தனது நண்பர் ஸ்டெபினுடன் மோட்டார் சைக்கிளில் திங்கள் சந்தை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் ஒருவர் மாங்குழி பகுதிக்கு வருமாறு அழைத்தார்.

உடனே சுஜித் தனது நண்பருடன் மாங்குழி பகுதிக்கு சென்றார். அங்கு திங்கள்சந்தை பெரிய பள்ளியை சேர்ந்த சுரேஷ் (வயது 42) அவரது நண்பர் ராபின் என்ற விமல் ஆகிய இருவர் நின்றனர். அவர்கள் சுஜிதிடம் தகராறு செய்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுஜித்தை சரமாரியாக குத்தினார் .

இதில் ரத்த வெள்ளத்தில் சுஜித் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் சுரேஷ், ராபின் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சுஜித் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த பொது மக்கள் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சுஜித்தின் உறவினர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சுஜித் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை வழக்கு குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுரேஷ், ராபின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குளச்சல் ஏ.ஏஸ்.பி. விஷ்வேஷ் சாஸ்திரி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. செல்போன் டவர் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுரேஷ், ராபின் இருவரும் நாகர்கோவில் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரித்த போது கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. சுஜித் மீன் வியாபாரம் செய்யும் போது வாடிவிளையை சேர்ந்த பெண் ஒருவர் மீன் வாங்க வந்துள்ளார். அவருக்கும் சுஜித்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சுரேஷ் அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் சுஜித்தை குத்திக்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வாடிவிளையை சேர்ந்த கள்ளக்காதலியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து போலீசார் அவரை விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News