செய்திகள்
கோப்புப்படம்

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஊராட்சி செயலர் உள்பட 11 பேரின் உயிரை பறித்த கொரோனா

Published On 2021-05-16 01:29 GMT   |   Update On 2021-05-16 01:29 GMT
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும் கொரோனா பரவல் கட்டுக்குள் அடங்காமல் தினமும் பலருக்கு பரவி வருகிறது.
தேனி:

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும் கொரோனா பரவல் கட்டுக்குள் அடங்காமல் தினமும் பலருக்கு பரவி வருகிறது.

இந்தநிலையில் ஆண்டிப்பட்டி அருகே ஏத்தக்கோவில் ஊராட்சியில் பணியாற்றிய 55 வயது ஊராட்சி செயலர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 7 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஊராட்சி செயலர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 54 வயதுடைய அவருடைய அண்ணன் மனைவி கொரோனா பாதிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரும் நேற்று தொற்றுக்கு பலியானார். ஒரே குடும்பத்தில் 2 பேர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல், கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியகுளத்தை சேர்ந்த 50 வயது பெண், கம்பத்தை சேர்ந்த 48 வயது பெண், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 80 வயது முதியவர், குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த 48 வயது ஆண், கண்டமனூரை சேர்ந்த 56 வயது ஆண், தேனி ரத்தினம் நகரை சேர்ந்த 46 வயது பெண் ஆகிய 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 474 ஆக உயர்ந்தது. மேலும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 250 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது 3 ஆயிரத்து 798 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 458 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 143 பேர் பெண்கள் ஆவர். இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்து 511 ஆனது. அதேநேரம் 280 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 409 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையே பழனியை சேர்ந்த 67 வயது முதியவர், 70 வயது முதியவர் மற்றும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 60 வயது முதியவர் என 3 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகினர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்தது.
Tags:    

Similar News