செய்திகள்
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ.1 கோடி வழங்கிய தமிழக ஆளுநர்
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மக்கள் தாராளமாக நிதியுதவி வழங்கும்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து பல்வேறு திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ஆளுநரின் விருப்புரிமை நிதியில் இருந்து இந்த நிதியை வழங்கி உள்ளார்.
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மக்கள் தாராளமாக நிதியுதவி வழங்கவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.