செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூரில் ஒரே நாளில் 647 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி 3 பேர் பலி

Published On 2021-05-13 01:10 GMT   |   Update On 2021-05-13 01:10 GMT
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியாகினர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக நாள் ஒன்றின் பாதிப்பு 500 என்ற அளவிற்கு இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை தினமும் புதிய புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

அதன்படி நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 180-ஆக உயர்ந்துள்ளது.

இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 250 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 602-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 314-ஆக உள்ளது. இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 3 பேர் நேற்று பலியாகினர்.

திருப்பூரை சேர்ந்த 54 வயது பெண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். திருப்பூரை சேர்ந்த 66 வயது ஆண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை, திருப்பூரை சேர்ந்த 59 வயது ஆண் மதுரையில் உள்ள ரெயில்வே மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 264-ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News